Thursday, September 20, 2012

தி.மு.க-இவர்களின் மத்திய அரசுக்கு எதிராக இவர்களே போராடுவார்களாம்-யாரை முட்டாளாக்க?

தி.மு.க-இவர்களின் மத்திய அரசுக்கு எதிராக இவர்களே போராடுவார்களாம்-யாரை முட்டாளாக்க?


காங்கிரசு கட்சியின் ஆட்சியில் தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் தாறுமாறாக ஏற்றி வந்த வேளையில், தற்போது மீண்டும் சாமான்ய மக்களை வதைக்கின்ற வகையிலே டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றை  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கின்ற தி.மு.க, திரினாமுல் காங்கிரசு ஆகிய கட்சிகளும் எதிர் கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து வருவதாக நாடகம் அரங்கேற்றி வருகின்றார்கள்.

மத்திய அரசாங்கத்தின் எந்த முக்கிய அறிவிப்பாக இருந்தாலும் அதை அறிவிப்பதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளை ஆலோசித்த பின்பே அறிவிப்பார்கள். அதே போல் தற்போது மத்திய காங்கிரசு அறிவித்திருக்கின்ற டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆகிய அறிவிப்புகளும் தி.மு.க, திரினாமுல் காங்கிரசு ஆகிய கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்த அறிவிப்பும் வந்துள்ளது. மத்திய அமைச்சர்களின் கூட்டத்திலே தங்களின் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்திருந்தால், இந்த அறிவிப்பை அவர்களால் தடுத்திருக்க முடியும்.  ஆனால் மக்களை பாதிக்கும் இந்த அறிவிப்பை தடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டு இப்பொழுது மக்களுக்காக மத்திய அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதுபோல் நாடகம் ஆடுகின்றார்கள்.

திரினாமுல் காங்கிரசு ஒவ்வொரு பிரச்சினையிலும் காங்கிரசு கட்சியை வழக்கமாய் மிரட்டுவது என்பது புதிதல்ல என்றாலும் கூட அதன் மூலமாக ஏதோ ஒரு வகையில் மாநிலத்திற்கு நிதியையும், திட்டங்களையும் பெற்று தம் மக்களுக்கு நன்மைகள் செய்தார்.  தேசத்தின் நலனை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்றாலும் கூட மாநிலத்தின் நலன்களை எப்பொழுதும் அவர் விட்டுக்கொடுத்ததில்லை.

ஆனால் தேச நலனையோ, மாநில நலனையோ, மக்கள் நலனையோ கருத்தில் கொள்ளாமல், தன் நலனையும், தன் மக்கள்(பிள்ளைகள்) நலனையும் மாத்திரம் கருத்தில் கொண்டு காங்கிரசு கட்சியிடம் பேரம் பேசுவது தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வழக்கம்.  3 லட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுப்பதற்காக காங்கிரசு அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. கூட்டணியை விட்டு வெளியேருவோம்  என்று ஒரு வார்த்தை கூறியிருந்தாலும் கூட  ஈழத்திலே 3 லட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஈழத் தமிழர்களை கொல்வதற்காக இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலே அதுவும் தமிழகத்திலே ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுக்கும் எதிராக கொலை பயிர்ச்சி கொடுத்ததற்காக காங்கிரசை  எதிர்த்து ஒரு குரல் கொடுத்திருந்தாலும் அது நிறுத்தப்பட்டிருக்கும்.  தமிழக மீனவர்கள் இலங்கை கப்பர் படையல் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப் படுவதற்கும் எதிராக ஒரு குரல் கொ டுத்திருந்தாலும் தமிழக மீனவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவதற்காக ஒரு அழுத்தமான குரல் மத்திய அரசிடம் கொடுத்திருந்தாலும் இன்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். காங்கிரசுக்கு போதுமான அழுத்தத்தை  கொடுத்திருந்தால் முல்லைபெரியறு, பாலாறு, தென்பென்னையார் பிரட்சினைகளில்  தமிழகத்தின் உரிமை காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஆனால் ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டிருந்தும், மத்திய அரசில் பலம் வாய்ந்த அசைக்க முடியாத கூட்டாளியாக இருந்தும், தமிழகத்தின் எந்த பிரட்சினயையும் தீர்க கருணாநிதி அவர்கள் முயற்சிகூட எடுக்கவில்லை என்பது வேதனையான உண்மை.  இப்படி செல்வாக்கான கூட்டாளியாக இருந்துமே தமிழகத்திற்காக எதையும் செய்யாத கருணாநிதி அவர்கள், இப்பொழுது ஏதோ திடீர் ஞானம் வந்தவர் போல டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றை கண்டித்து மத்திய அரசாங்கத்திற்கு எதுராக எதிர் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவதாக நாடகம் போடுகின்றார்.

இவர்கள் அங்கம் வகிக்கின்ற மத்திய அரசாங்கத்திற்கு எதிராக இவர்களே போராட்டம் நடத்துவார்களாம், இதை மக்கள் நம்பவேண்டுமாம். 2012 ஆம் ஆண்டில் கூட இன்னும் மக்களை முட்டாள்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி அவர்களுக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment